ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் சிமென்ட் கல் சாலை அமைக்க, பொது வழியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்டது, புதுநகர் மற்றும் புது அரிஜன காலனி. இரு பகுதிக்கும் இடையே, 40 அடி நீள பொது வழி உள்ளது. இங்கு, சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த பொது வழியில், 12 அடி அகல சிமென்ட் கல் சாலை அமைக்க நிதி ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தன.

இந்த பொது வழியின் சிறிய பகுதியை ஆக்கிரமித்த தனிநபர் ஒருவர், சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், சாலை பணிகள் நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்த புது அரிஜன காலனி குடியிருப்பு மக்கள் நேற்று கன்னியம்மன் கோவில் மேம்பாலம் துவங்கும் இடத்தில் உள்ள ஜி.என்.டி., சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலை பணிகளை மேற்கொள்ள வசதியாக உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர். வருவாய் துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினர்.

'உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி, சாலை வசதி ஏற்படுத்தப்படும்' என உறுதியளித்தனர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அடுத்த சில மணி நேரத்தில், ஆக்கிரமிப்பை அகற்றி சாலை பணிகள் துவக்கப்பட்டன.

Advertisement