டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

63


புதுடில்லி: டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ''உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா,'' என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டு, அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தமிழக அரசு வாதம்



இந்த தடையை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (அக் 14) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், ''தனிப்பட்ட நபர்களிடம் அவர்களது அலைபேசிகளை வாங்கி, அதில் இருக்கக்கூடிய அத்தனை தரவுகளையும் இவர்களிடம் இருக்கக்கூடிய நவீன உபகரணங்களில் மாற்றிக் கொள்கிறார்கள்.



இதற்கெல்லாம் அமலாக்கத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அமலாக்கத்துறை கணினிகளை பறிமுதல் செய்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது என வாதாடினார்.

அமலாக்கத்துறை வாதம்



பின்னர் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு கூறியதாவது: ''டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலையை விட அதிக கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து ஊழியர்கள் வசூலிக்கிறார்கள். அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களையும் கூட டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் விற்கிறார்கள். இவை அனைத்திலும் லஞ்ச பணம் விளையாடுகிறது.



இந்த பணம் மேல் மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து பகிர்ந்து அளிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இது தினம் தோறும் நடக்கும் நடைமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுபான கடைகளில் மோசடி நடைபெறுகிறது. அவர்களை மாநில அரசு காப்பாற்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி



பின்னர் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: கடந்த ஆறு ஆண்டுகளில் நான் பல அமலாக்கத்துறை வழக்குகளை பார்த்து இருக்கிறேன். திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளை நான் மீண்டும் சொல்ல விரும்பவில்லை.



உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்தில் கூட உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக தமிழக அரசு தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திடீரென அமலாக்கத்துறை ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறது? போட்டி, விவாதம் எல்லாம் இங்கே தேவையில்லை. இவ்வாறு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Advertisement