சாராய விற்பனையில் திமுக அரசு கவனம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கோவை: வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் 789 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன. சாதாரண நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தில், பண்டிகை நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ, மக்களின் மகிழ்ச்சியும் நிம்மதியும் குலைந்துவிடுமோ என நாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், சம்பந்தப்பட்ட திமுக அரசும் அதை இயக்கும் முதல்வர் ஸ்டாலினும் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது.
அதுவும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்?
மழை வெள்ளத்தால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது, தேனியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீண்டபாடில்லை, அத்தியாவசியப் பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 90% மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறிய சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது, முறையான சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் விளைவித்த பயிர்கள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப் போயுள்ளது, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கிருந்த பயிர்களும் சேதமாகியுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித சேதமுமில்லாமல், மதுவை சிறிதும் தொய்வின்றி விற்பனை செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. இதுதான் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா? இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சம்பந்தமேஇல்லை
கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கேட்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை வைக்க முடியாத நிலை இருக்கிறது. சட்டசபையில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும், அளிக்கப்படும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. ரூ.890 கோடிக்கு மது விற்பனை செய்தது மட்டும் தான் திமுக அரசு செய்த சாதனை. சாதி ரீதியில் படம் எடுப்பது சரியில்லை. எனக்கு பைசன் பற்றி தெரியாது. பைசல் மட்டுமே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
'லெப்டினன்ட் கர்னல்' நீரஜ் சோப்ரா * இந்திய ராணுவத்தில் கவுரவம்
-
கபடி: பைனலில் இந்திய பெண்கள் * ஆசிய யூத் விளையாட்டில்...
-
சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு குழுவில் தமிழக ஐ.பி..எஸ்.,கள்
-
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * நியூசிலாந்துடன் இன்று மோதல்
-
அடிலெய்டில் பதிலடி தருமா இந்தியா * ஆஸி.,யுடன் இன்று இரண்டாவது மோதல்
-
விண்வெளியில் லட்சக்கணக்கான மக்கள் வசிப்பார்கள்: ஜெப் பெஜோஸ் கணிப்பு