அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா புதிய எச்சரிக்கை

வாஷிங்டன்: ''அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் சீனா தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்'' என்று சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கூடுதல் வரி விதிப்பையும் அமல்படுத்தினார். இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு, 155 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியிருந்தார்.
அந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தார். தற்போது இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''நான் சீனாவுடன் நட்புறவுடனேயே இருக்க விரும்புகிறேன். வரி விதிப்பில் சீனா எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டது. உலக நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க விரும்பும் சீனாவை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் வரும் நவ., 1-ம் தேதி முதல், 155 சதவீத வரி விதிக்கப்படும்'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் உக்கிரம் அடைந்து இருக்கிறது. கோல்கட்டாவில் சீனத் தூதர் வெய், ஒரு நிகழ்வில் பேசுகையில், அமெரிக்க-சீனா வரிவிதிப்புப் போர் குறித்து கேட்டபோது கூறியதாவது: அமெரிக்க-சீன வரிவிதிப்புப் போர் பிரச்னையில், சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை. ஆனால் கடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டால், நாங்கள் நிச்சயமாக பதிலளிப்போம்.
நாங்கள் போராடுவோம், ஆனால் எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அவ்வாறு செய்யாவிட்டால், சீனா தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இது தான் எங்கள் அணுகுமுறை. இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
ஆட்சி முடியும் நேரத்தில் நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இன்று 14 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள்!
-
சூடுபிடித்தது பீஹார் தேர்தல் களம்: இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு
-
நெற்பயிர் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: தமிழக அரசுக்கு நயினார், சீமான் வலியுறுத்தல்
-
மலேசியாவில் ஆசியான் உச்சிமாநாடு; காணொலி காட்சியில் பங்கேற்கிறார் மோடி