அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது

1


புதுடில்லி: தன் நிறுவனங்கள் பெயரில் வாங்கிய கடனை மற்ற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்திய புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையைத் தொடர்ந்து மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகமும் விசாரணையை துவக்கியுள்ளது.



ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரரும், தொழிலதிபருமான அனில் அம்பானி, தன் நிறுவனங்கள் பெயரில் வாங்கிய கடனை, மற்ற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஜூலையில் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் தொடர்புடைய 35 இடங்களில் சோதனை நடத்தியது.இதில், 17,000 கோடி ரூபாய் அளவுக்கு, பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக கடனாக பெற்ற தொகை, சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனிடையே, கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலத்தில், யெஸ் வங்கியிடம் இருந்து ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் 2,965 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் 2,045 கோடி ரூபாயும் கடனாக பெற்றன.இதை வேறு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதுடன், 3,337 கோடி ரூபாய் அளவுக்கு கடனை திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பான புகாரில், கடந்த ஆகஸ்டில் அனில் அம்பானி விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

பிறகு, கடந்த செப்டம்பரில் அனில் அம்பானி மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அனில் அம்பானியின் மும்பை வீடு, அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான டில்லி, புனே, தானே, நொய்டா, காஷியாபாத், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட சொத்துக்களை, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முதல்கட்ட முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மதிப்பு 7,000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. செபி அமைப்பும் மற்றொரு புறம் விசாரணை நடத்தி வருகிறது.


இந்நிலையில் அடுத்த கட்டமாக மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் விசாரணையை துவக்கியுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், வங்கிகளில் பெற்ற கடன் தொகையை பெருமளவில் மாற்றப்பட்டதும், கம்பெனிகள் சட்டத்தை பெரிய அளவில் மீறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விசாரணையானது தீவிர மோசடி விசாரணை அலுவலகப்(SFIO) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவானது நிதி மாற்றப்பட்டது குறித்தும், அதற்கு காரணமானவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த உள்ளது. இதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement