மழை இல்லாததால் நெல் கொள்முதல் பணிகள் துரிதம்
கரும்பாக்கம்: ஒரு வாரமாக கனமழை இல்லாததால், கரும்பாக்கம், களியப்பேட்டை, திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல், அரும்புலியூர், கரும்பாக்கம், பினாயூர், களியப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நெல் சாகுபடி பிரதான விவசாயமாக உள்ளது. இப்பகுதியில், சொர்ணவாரி பட்டத்திற்கு சாகுபடி செய்த நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, திருமுக்கூடல், கரும்பாக்கம், களியப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை லாரிகள் ஏற்றி செல்லாததால் தேக்கம் அடைந்திருந்தன.
இதனால், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டு வீணாகி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் தெரிவித்தனர்.
தொடர் மழை மற்றும் லாரிகள் தட்டுப்பாடு உள்ளிட்ட கராணங்களால் நெல் மூட்டைகள் ஏற்றி செல்வதில் தாமதம் ஏற்படுவதாக கொள்முதல் நிலைய அதிகாரிகள் கூறி வந்தனர்.
இந்நிலையில், ஒரு வாரமாக இப்பகுதிகளில் முற்றிலும் மழைப்பொழிவு இல்லாமல் வறண்ட வானிலை காணப்படுகிறது.
மழை இல்லாததால் கரும்பாக்கம், களியப்பேட்டை, பினாயூர் உள்ளிட்ட பகுதி களில், கொள்முதல் நிலையங்களில் தேக்கமாகி இருந்த நெல் மூட்டைகள், லாரிகள் மூலம் ஏற்றிச் செல்லும் பணியினை துரிதப்படுத்தி நடப்பாண்டு சொர்ணவாரி பட்டத்திற்கான நெல் கொள்முதல் நிறைவு பெற்றுள்ளது.