சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாஜி அமைச்சர் கவர்னரிடம் மனு

புதுச்சேரி: காங்., கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கவர்னரிடம், மாஜி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கடிதம் கொடுத்துள்ளார்.

காங்., தலைவர் வைத்திலிங்கத்திற்கும், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஒருவரை, ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஏனாம் காங்., நிர்வாகிகள் நேற்று முன்தினம், கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். அதில், ஏனாம் மக்களுக்கு மழை நிவாரணமாக, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோரியிருந்தனர்.

இதற்கு பதிலடியாக மல்லாடி கிருஷ்ணாராவ், கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளார்.

அதில், சுகாதாரத்துறையில் கண்டறியப்பட்ட சில பிரச்னைகள் குறித்து, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

எனது வாழ்வில், பல பதவிகளை வகித்துள்ளேன். கடமையை, வெளிப்படை தன்மையுடன் நேர்மையாக செய்துள்ளேன். பதவிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதில்லை.

எனவே, டில்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து என்னை நீக்கி, என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில், கூறியுள்ளார்.

Advertisement