38 வயது பெண் 'டார்ச்சர்' 19 வயது வாலிபர் தற்கொலை

5

பெங்களூரு: தன்னுடனான கள்ளத்தொடர்பை கைவிடக்கூடாது என, 38 வயது பெண் மிரட்டியதால், 19 வயது வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா மூடசிந்தலஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சாரதா, 38. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, குழந்தைகளுடன் தனியே வசிக்கிறார்.

அதே கிராமத்தில் வசித்த நிகில் குமார், 19, என்பவருடன் சாரதாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. இது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்த விஷயம் நிகில் குமாரின் பெற்றோருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

சாரதாவை திட்டி, 'இனி எங்கள் மகனை பார்க்கக்கூடாது' என, கண்டித்தனர்; மகனுக்கும் அறிவுரை கூறினர். பெற்றோரின் பேச்சால் மனம் மாறிய நிகில் குமார், சாரதாவை விட்டு விலகினார். ஆனாலும், சாரதா அவரை விடவில்லை. பலவந்தமாக நிகில் குமாரை வெளியே அழைத்துச் சென்றார்.

மேலும், 'என்னுடன் உறவை முறித்துக் கொண்டால், நாம் இருவரும் நெருக்கமாக இருந்த படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மானத்தை வாங்குவேன்' என மிரட்டியதாக தெரிகிறது.

சாரதாவின் நெருக்கடியால் விரக்தியடைந்த நிகில் குமார், காச்சனஹள்ளி ஏரி அருகில் உள்ள மரத்தில், நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 'மகன் தற்கொலைக்கு சாரதாவின் தொந்தரவே காரணம்' என, நிகில் குமாரின் பெற்றோர், சிந்தாமணி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement