அருப்புக்கோட்டையில் கோயில்கள் அருகே டாஸ்மாக்; தள்ளாடும் குடிமகன்களால் பெண் பக்தர்கள் வேதனை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கோயில்கள் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் தள்ளாடும் குடிமகன்களால் கோயிலுக்கு செல்லும் பெண் பக்தர்கள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் அமுதலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இதன் அருகில் யோகிராம் சூரத்குமார் கோயில், ஆழக்கரிசி விநாயகர் கோயில், மாலைக் காரி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இவற்றின் அருகில் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் எதிரில் பெண்கள் படிக்கும் கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், வாகனங்கள் வந்து செல்லும். பள்ளி மாணவர்களும் இந்த வழியாகத்தான் வந்து செல்ல வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. நன்கு குடித்துவிட்டு ரோட்டில் தள்ளாடி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர். டூவீலர்களை நிறுத்தி தகராறு செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பெண்கள் அச்சத்துடன் வர வேண்டி உள்ளது. டாஸ்மாக் வழியாக மக்கள் வர தயங்குகின்றனர்.

இதுகுறித்து கல்வி நிறுவனங்கள், கோயில் நிர்வாகத்தினர் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கடையை அகற்ற கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கோயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement