வெடிகுண்டு தயாரிப்புக்கு ஆந்திராவிலும் ஆட்கள் சேர்த்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்
சென்னை : 'வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக, ஆந்திராவிலும் ஆட்கள் சேர்க்கும் பணியில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் ஈடுபட்டுள்ளார்' என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை, 60, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஏழு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த பின், மீண்டும் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
அபுபக்கர் சித்திக் அளித்த வாக்குமூலம் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 1998ல், கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய புள்ளியாக அபுபக்கர் சித்திக் செயல்பட்டுள்ளார். மதுரையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற சம்பவத்திலும், 'பைப்' வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்துள்ளார்.
கடந்த, 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர், வெளிநாடுகளுக்கு சென்று, பயங்கரவாத செயலுக்கு நிதி திரட்டி உள்ளார். ஆந்திராவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது போல வலம் வந்துள்ளார். அங்கு பல பகுதிகளுக்குச் சென்று, வெடிகுண்டு தயாரிப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, வெடிகுண்டு தயாரிப்புக்கான மூலப்பொருட்களையும் வாங்கி உள்ளார். இவர் ஆந்திராவில் தங்கி இருந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 30 கிலோ வெடி மருந்தை ஒப்படைத்து உள்ளார். இவரது தலைமையில் தான் மற்றொரு பயங்கரவாதியான முகமது அலி செயல்பட்டுள்ளார். அபுபக்கர் சித்திக், தன்னிடம் இருந்த டிஜிட்டல் ஆவணங்களில் சதி திட்டம் தீட்டுதல், ரகசிய குறியீடுகள் குறித்த விபரங்களை எல்லாம் பதிவு செய்து வைத்திருந்தார். அது பற்றிய தகவல்களையும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இப்படிப்பட்ட மனித மிருகங்களை ஏன் என்கவுண்டர் செய்ய முடியவில்லை.