2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'

ஹாசன்: ஹாசன் மாவட்டம், பேலுாரு தாலுகாவின், ஜகபோரனஹள்ளி கிராமத்தில், நேற்று காலை காட்டு யானைகள் பீமா மற்றும் கேப்டன் இடையே, கடுமையான மோதல் ஏற்பட்டது. மல்யுத்த வீரர்களை போன்று, ஒன்றை ஒன்று தாக்கி கொண்டன.

ஊருக்குள் நுழைந்து பிரதான சாலைகளில் கண்மூடித்தனமாக ஓடின. பொதுமக்கள், அலறியடித்து ஓடி தப்பினர். யானைகளின் மோதல் குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர், அவற்றை கட்டுப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை.

அங்கிருந்த வீட்டு வளாகத்தில் புகுந்த கேப்டன் யானை, பீமாவுடன் மீண்டும் மோதியது. கொட்டகையில் கட்டப்பட்டிருந்த சில பசுக்கள், கயிற்றை அறுத்து கொண்டு ஓடி தப்பின.

கேப்டன் யானை வீட்டின் எதிரே இருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை, தன் தந்தத்தால் உடைத்து நொறுக்கியது. மாட்டு வண்டியை தும்பிக்கையால், துாக்கி வீசியது.

கேப்டனின் ஆக்ரோஷமான தாக்குதலில், பீமாவின் தந்தம் உடைந்தது. நீளமான தந்தத்துடன் கம்பீரமாக நடந்து வரும் பீமா, இப்போது பரிதாபமாக மாறியுள்ளது. வனத்துறையினர் படாதபாடுபட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.

இந்த சம்பவத்தால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மீண்டும் யானைகள் ஊருக்குள் நுழையுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

Advertisement