டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா

9

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையை திரித்து வெளியிட்டதாக எழுந்த விவகாரத்தில் பிபிசி டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.


அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்தது என்று, பிரபல செய்தி நிறுவனமான பிபிசி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.
இந்த ஆவணப்படத்தில், டிரம்ப் பேசிய இரண்டு தனித்தனி வீடியோக்கள், எடிட் செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.ஒரே வீடியோ போன்று தோற்றம் அளிப்பது போல் இந்த ஆவணப்படம் இருந்தது.
இதன் மூலம் தன் உரையை திரித்து வெளியிட்டதாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிபிசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போலியான செய்தி என்றும் குற்றம் சாட்டினர். இது பற்றி விசாரணைக்கு பிபிசி நிறுவனம் உத்தரவிட்டது.
முன்னாள் ஆலோசகரான மைக்கேல் பிரெஸ்காட் தலைமையிலான பிபிசியின் ஆசிரியர் வழிகாட்டுதல் குழு தொகுத்த 19 பக்க உள்தகவல் அறிக்கையில், டிரம்ப் கலவரத்தை தூண்டியது போன்ற பிம்பத்தை ஆவணப்படம் உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பிபிசிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், பிபிசி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பிபிசி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவி வெளியிட்ட அறிக்கையில், "இது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவாகும். எனது பதவிக் காலம் முழுவதும், குறிப்பாக சமீபத்திய நாட்களில் எனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.


புதிய டைரக்டர் ஜெனரல் நியமிக்கப்படும் வரை டிம் டேவி, அந்தப் பதவியில் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement