எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக அரசு நாடகம்: சீமான் குற்றச்சாட்டு

3

சென்னை; பூத் லெவல் அதிகாரிகளை நியமித்துவிட்டு எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி;

எஸ்ஐஆர் வேண்டாம் என்றால் பூத் லெவல் அதிகாரிகளை நியமித்தது யார்? உங்களுக்குத் தான்(தமிழக அரசை குறிப்பிடுகிறார்) வேண்டாம் என்று கூறுகிறீர்களே? அப்போது எதற்காக நியமிக்கிறீர்கள்? பூத் லெவல் அதிகாரிகளை நியமிப்பது தேர்தல் ஆணையமா?

எஸ்ஐஆர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் என்று கூறி எதற்காக தமிழக அரசு உதவி எண்களை அறிவித்தது? எஸ்ஐஆர் வேண்டாம் என்று கூறி எதிர்த்து விட்டு எதற்காக திமுக இந்த நாடகம் போடுகிறது? அவசரமாக சட்டசபையை கூட்டி, இது சீர்திருத்தம்(எஸ்ஐஆர்) அல்ல... சீரழிவு என்று கூற வேண்டும்.

இறந்தவர்களை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். ஒருத்தன் 2 வாக்குரிமை வைத்துள்ளான், செத்தவர்கள் எல்லாம் ஓட்டு போட்டுள்ளனர் என்பதை நேற்று தான் கண்டுபிடித்தீர்களா? இறப்பு சான்றிதழ்களை கொண்டு அவர்களை கண்டறிந்து வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கலாமே.

அன்றைக்கு வாக்காளர் ஆட்சியாளரை தீர்மானித்தனர். ஆனால் இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், யார் தனக்கு ஓட்டு போட வேண்டும் என்று வாக்காளர்களை தீர்மானிக்கின்றனர்.

இந்த நாடு ஏற்றுக் கொண்டுள்ள பொருளாதார கொள்கை ஆபத்தானது. நாட்டில் ராணுவத்தில் கூட அந்நிய முதலீடு 100 சதவீதம் வந்துவிட்டது. கல்வி, மின் உற்பத்தி மருத்துவம், போக்குவரத்து என அனைத்தும் தனியார் மயம். இப்படி எல்லாமே தனியார்மயம் என்றால் அரசின் வேலை என்ன? பொதுத்துறை என்று எதுவுமே இல்லை.

இவ்வாறு சீமான் பேட்டி அளித்தார்.

Advertisement