'பவளவிழா பாப்பா, பாசாங்கு கூடாது பாப்பா' தி.மு.க., குறித்து விஜய் கடும் விமர்சனம்

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் அறிக்கை:

சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து, அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்கு பழக்கமான, அவதுாறு அரசியல் ஆட்டத்தை துவக்கி உள்ளது.

இப்போதெல்லாம், அந்த கட்சியின் ஒரே இலக்கு, நம்மை துாற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும், மூளையில் தேக்கி யோசிப்பதே, அதன் முழு நேர வேலையாகி விட்டது. அவர்களுக்கு அவதுாறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சிய கோட்பாடு.

இந்நிலையில், மக்கள் சக்தியுடன், அரசியலுக்கு வருகிற, நம் இயக்கத்தை கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்.

அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணி, அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர். அவர்கள் மீது, நாம் இன்னும் முழுமையான விமர்சனத்தை துவங்கவே இல்லை.

அந்த கட்சியின் தலைவர், 'எந்த கொம்பனாலும், எங்களையோ, ஆட்சியையோ வீழ்த்த முடியாது' எனக் கூறியது, அவருடைய அதிகார மயக்க முழக்கம்.

'தமிழகம், தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர்; மண், மொழி, மானம்தான், தங்கள் தலையாயக் கொள்கை' என, ஒரு சம்பிரதாய சங்கை முழங்கத் துவங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.

யாரை ஏளனமாக பரிகாசம் செய்தனரோ, அவர்களிடமே பதவிக்காக பம்மினரே. அப்போது எங்கே போயிற்று மானம்.

ஆட்சியில் இல்லாதபோது, தமிழ், தமிழர் என்பதும், ஆட்சிக்கு வந்ததும், அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்து கொண்டு, அரசியல் சாசன கட்டுப்பாடுகள் மீது, பழி போட்டு பதவி சுகம் காணும்போது, எங்கே போனது மண், மொழி மீதான கொள்கைப் பாசம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல், மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்து தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை.

அறிவுத்திருவிழா எனப் பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, த.வெ.க.,வை மட்டுமே மறைமுகமாக திட்டும் திருவிழாவாக, அதை மாற்றியதிலேயே, அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல், அவதுாறு திருவிழாவாகத்தானே மாறியது.

தினமும் நாக்கு குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா. பவளவிழா பாப்பா, நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா. நீ நல்லவர்போல நடிப்பதை பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா.

எல்லா வகையிலும் கபட நாடகமாடும், தி.மு.க.,வின் அவல ஆட்சியின் லட்சணங்களை, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.

மக்கள் சக்தியின் மதிப்பை, தேர்தல் வாயிலாக, அவதுாறு மன்னர்களுக்கு உணர்த்துவோம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement