முட்டாள்தனத்தில் இருந்து விலகியே இருங்கள்! மாணவர்களுக்கு முதல்வர் சித்து அறிவுரை

பெங்களூரு: ''நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி கொண்ட நீங்கள், முட்டாள்தனம் மற்றும் ஊழலில் இருந்து விலகியே இருங்கள்,'' என, பள்ளி மாணவர்களுக்கு, முதல்வர் சித்தராமையா அறிவுரை கூறி உள்ளார்.

பெங்களூரு விதான் சவுதாவில் பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தைகள் தின விழாவை துவக்கி வைத்து, முதல்வர் சித்தராமையா பேசியதாவது: குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம் என்ற தொலைநோக்கு பார்வையை நேரு கொண்டிருந்தார்.

இதனால் குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் கல்வியை விதைக்க அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் எதிர்காலம் சித்தாந்த, அறிவியல் மனப்பான்மை கொண்ட மாணவர்களால் வடிவமைக்கப்படுகிறது. இதனால் ஆரம்ப கல்வியில் இருந்தே முட்டாள்தனம், ஊழலில் இருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும். கல்விக்கு காங்கிரஸ் அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கல்விக்காக 65,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறோம். திறமை யாருடைய சொத்தும் அல்ல. இந்த ஆண்டு 900 கர்நாடக பொது பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

அரசு பள்ளியில் படித்த நான் முதல்வராகி உள்ளேன். ஏழைகள் குடும்ப மாணவர்களுக்காக உதவி தொகை, இந்திரா பெயரில் தொகுப்பை அரசு வழங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement