37 ஆண்டுகள் முன்பு காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவிய எஸ்ஐஆர்! இது மேற்குவங்க அதிசயம்

7

கோல்கட்டா: 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒருவரை எஸ்ஐஆர் உதவியுடன் அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்த நிகழ்வு மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்தி உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் பற்றி அரசியல் கட்சிகள் இடையே ஏராளமான கருத்து முரண்கள் உள்ளன. இவை அரசியல் ரீதியானவை என்று ஒரு பக்கம் இருந்தாலும் இதே எஸ்ஐஆரால் 37 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன ஒருவரை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது எஸ்ஐஆர் பணிகள் வேகம் எடுத்துள்ள மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் புருலியா. இந்த கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மகன் விவேக் சக்கரவர்த்தி என்பவர் 1988ம் ஆண்டு காணாமல் போனார்.

அவர் எங்கே உள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தேடாத இடம் இல்லை, எடுக்காத முயற்சிகள் இல்லை. எவ்வளவோ முயன்றும் விவேக் சக்கரவர்த்தி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய, மேற்கொண்டு தமது தேடலை சக்கவரத்தி கைவிட்டுவிட்டார்.

இந் நிலையில், கோல்கட்டாவில் விவேக் சக்கரவர்த்தியின் சகோதரர் பிரதீப் சக்கரவர்த்தி என்பவர் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக உள்ளார். எஸ்ஐஆர் விண்ணப்ப படிவத்தில் இவரின் செல்போன் எண் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணுக்கு விவேக் சக்கரவர்த்தியின் மகன் போன் செய்து, தமது எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுமாறு கேட்டுள்ளார். விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து தகவல்களையும் ஒவ்வொன்றாக கேட்டு பெற ஆரம்பித்துள்ளார். 37 ஆண்டுகளுக்கு முன்னர் தமது தந்தை வீட்டை விட்டும், சொந்த கிராமமான புருலியாவை விட்டும் வெளியேறியதை கூறினார்.

அப்போது அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் தமது குடும்ப உறுப்பினர்களின் தகவல்களுடன் ஒத்து போகவே பிரதீப் சக்கரவர்த்திக்கு ஏதோ பொறி தட்டி இருக்கிறது. உடனடியாக, விவேக் சக்கரவர்த்தியிடன் போனை தருமாறு கூற இருவரும் சில நிமிடங்கள் பேசி உள்ளனர். அதன் பிறகே காணாமல் போன விவேக் சக்கரவர்த்தி தான் மறுமுனையில் பேசுவது என்பதை பிரதீப் சக்கரவர்த்தி கண்டுபிடித்தார்.

இதுகுறித்து விவேக் சக்கரவர்த்தி கூறியதாவது; அந்த உணர்வுகளை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.37 ஆண்டுகள் கழித்து நான் என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடம் பேசி இருக்கிறேன். என் மனது முழுதும் மகிழ்ச்சியால் நிரம்பி உள்ளது.

தேர்தல் கமிஷனுக்கு என் நன்றிகள். எஸ்ஐஆர் இல்லை என்றால் இது நடந்திருக்கவே முடியாது.

இவ்வாறு விவேக் சக்கரவர்த்தி கூறினார்.

Advertisement