இதே நாளில் அன்று

டிசம்பர் 16: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், குப்பம் என்ற ஊரில், கிருஷ்ணராஜ ராவின் மகனாக, 1933ல் இதே நாளில் பிறந்தவர், அடையாறு லட்சுமணன்.

சென்னை அடையாறில், ருக்மிணிதேவி அருண்டேல் நடத்திய, கலாஷேத்ரா நாட்டியப் பள்ளியில், தன் 11வது வயதில் லட்சுமணன் சேர்ந்தார். அங்கு, ருக்மிணிதேவி அருண்டேலிடம் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், மிருதங்கம் மற்றும் நட்டுவாங்க வாசிப்பில் நேரடி பயிற்சியுடன் சிறப்பு பட்டம் பெற்றார்.

அம்பு பணிக்கர், சந்து பணிக்கரிடம், கதகளி நடனம் கற்றார். நாட்டியக் கலைஞர்களான மயிலாப்பூர் கவுரி அம்மாள், கே.தண்டாயுதபாணி பிள்ளை, எஸ்.சாரதா மற்றும் பாடகர்களான, டைகர் வரதாச்சாரி, பூதலுார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, டி.கே.ராமசாமி அய்யங்கார்; நாடக ஆசிரியரான மைசூர் வாசுதேவாச்சாரியார் உள்ளிட்ட பிரபலங்களுடன் பணியாற்றினார்.

பிரபல நடிகை வைஜெயந்தி மாலாவின் நாட்டியாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 'திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சங்கத்தமிழ் மாலை, ஆய்ச்சியர் குரவை' உள்ளிட்ட நாட்டிய நாடகங்களை தயாரித்தார்.

'கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர், தன் 80வது வயதில், 2014, ஆகஸ்ட் 19ல் காலமானார்.

இவரது பிறந்த தினம் இன்று!

Advertisement