ரத்த பரிசோதனை நிலையங்கள் மூடல் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
சென்னை: 'சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை மூட வழிவகுக்கும், தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து, பிப்.,15ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என, 'பாரா மெடிக்கல் லேப்' கல்வி மற்றும் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
அதன் தலைவர் காளிதாசன் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு, அடிப்படை ரத்த பரிசோதனை நிலையங்கள் செயல்பட, எந்தவித குறைந்தபட்ச இட நிர்ணயத்தையும் அறிவிக்கவில்லை.
ஆனால், தமிழக அரசு, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, மற்றும் பிற பரிசோதனை நிலையங்கள் செயல்பட, தேவையான இடவசதி குறித்து, அரசாணை 390ல் தெரிவித்துள்ளது.
அதன்படி, நகர்ப்புறத்தில் 500 முதல் 700 சதுர அடி; கிராமப்புறத்தில் 300 சதுர அடி பரப்பளவு இடம் இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள ரத்த பரிசோதனை நிலையங்கள் பெரும்பாலும், 100 சதுர அடிக்கு குறைவான இடங்களில் உள்ளன.
மேலும், 'எக்ஸ்ரே, 'சிடி ஸ்கேன்' போன்ற பரிசோதனை நிலையங்கள், குறைந்த அளவில் தான் உள்ளன. 80 சதவீதத்திற்கு மேல் ரத்த பரிசோதனை மையங்கள், குறைந்த அளவு இடத்தில் தான் இயங்கி வருகின்றன.
ஆய்வக நுட்புனர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்கள், சிறிய அளவிலான ரத்தப் பரிசோதனை மையங்களை நடத்தி வருகின்றனர்.
குறைந்த கட்டணத்தில், ஏழை மக்களுக்கு சர்க்கரை பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். அரசின் நடவடிக்கையால், சிறிய அளவிலான ரத்தப் பரிசோதனை நிலையங்கள், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
எனவே, இந்த அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் பிப்., 15ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 10 பேர் பலியான சோகம்
-
கலிபோர்னியாவை புரட்டிப்போடும் கிறிஸ்துமஸ் புயல்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்
-
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தூதர்களுடன் ஜெலன்ஸ்கி பேச்சு
-
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
-
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்
-
கனடாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை