தஞ்சையில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்; மஹாராஷ்டிரா வாலிபருக்கு மறுவாழ்வு

1


சென்னை: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானமாக பெறப்பட்டு, தஞ்சாவூரிலிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக சென்னைக்கு எடுத்து வரப்பட்டு, மஹாராஷ்டிரா வாலிபருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.


தஞ்சாவூரைச் சேர்ந்த, 19 வயது வாலிபர், சாலை விபத்தில் சிக்கி அங்குள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல், வெள்ளிக்கிழமை காலை மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினரின் ஒப்புதலுடன், அவரது இதயம் மற்றும் சிறு குடல், தானமாகப் பெறப்பட்டது.


சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், இதய செயலிழப்புக்குள்ளான மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, 33 வயது நோயாளிக்கு, தானமாகப் பெறப்பட்ட இதயத்தைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக முதன்முறையாக, தஞ்சாவூரில் இருந்து, ஹெலிகாப்டர் வாயிலாக சென்னைக்கு அதை விரைந்து எடுத்து வர, திட்டமிடப்பட்டது. அதன்படி, அரும்பாக்கம், டி.ஜி., வைஷ்ணவ கல்லுாரிக்கு வந்தடைந்த உறுப்பை, அங்கிருந்து, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், தடையற்ற போக்குவரத்து வழித்தடத்தை, சென்னை போலீசார் உருவாக்கி தந்தனர்.


இதன் பயனாக, இரண்டு நிமிடங்களில் மருத்துவமனைக்கு இதயம் சென்றடைந்தது. அங்கு, தயார் நிலையில் இருந்த இதய மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குனர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், வெற்றிகரமாக, நோயாளிக்கு இதயத்தைப் பொருத்தினர். இதன் வாயிலாக மஹாராஷ்டிர வாலிபருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

Advertisement