நாலாபுறமும் சரக்கு ரயில் பயணம் வெங்காய விலை உயராமல் நடவடிக்கை

புதுடில்லி : பல்வேறு காரணங்களால், வழக்கமாக வெங்காயம் விலை உயரக்கூடிய சீசனிலும், இந்த ஆண்டு சரக்கு ரயில்கள் அதிகரிப்பால், விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இத்துறையின் செயலர் நிதி காரே கூறியதாவது:

பருவமழை அதிகம் அல்லது பற்றாக்குறை காரணமாக, நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் வெங்காயம் விலை உயர்வது வழக்கம். அடுத்ததாக, விளைச்சல் அதிகமுள்ள இடங்களில் இருந்து தேவை அதிகம் உள்ள பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி குறைவு மற்றும் தாமதமும் விலை உயர காரணமானது.

ஆனால், இந்த ஆண்டில், போதிய பருவமழை, சாகுபடி பரப்பு அதிகரிப்பு, கூடுதல் விளைச்சல் ஆகியவற்றால் வெங்காய உற்பத்தி சீராக இருந்தது. அதோடு, கண்டா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில், ரயில்களில் வெங்காயம் போக்குவரத்துக்கு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது.

விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கொள்முதல் செய்து, கிடங்குகளில் வெங்காயத்தை சேமித்து வைத்தது. அதில் 85,719 டன் வெங்காயம், சரக்கு ரயில்கள் வாயிலாக, மஹாராஷ்டிராவில் இருந்து தெற்கு, கிழக்கு, வடக்கு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. இது கடந்த ஆண்டில் 11,798 டன் மட்டுமே.

ஒரு சரக்கு ரயில் பெட்டி, 30 லாரிகளில் ஏற்றிச்செல்லக்கூடிய 800 முதல் 900 டன் வெங்காயம் இடம்பெறும் அளவு இடவசதி கொண்டது. மொத்த வெங்காய சாகுபடியில், ஒரு சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் செய்தாலும், சரியான நேரத்தில், அதிக அளவிலான வெங்காயத்தை சரக்கு ரயில் வாயிலாக அனுப்பியதால், சந்தைகளில் அதன் இருப்பு சீராக உள்ளது.

கடந்த ஆண்டில் 14 சரக்கு ரயில்களில் வெங்காயம் போக்குவரத்து நடந்த நிலையில், இந்தாண்டு அது 86 ரயில்களாக அதிகரிக்கப்பட்டது. வினியோகமும் 5 மையங்களாக இருந்ததை 16 இடங்களாக அரசு அதிகரித்தது. இந்தநடவடிக்கைகளால் நாடு முழுதும் சராசரியாக ஒரு கிலோ வெங்காயம் விலை 25 முதல் 35 ரூபாயாக நீடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 ஆண்டுதோறும் ஜூலை முதல் ஜூன் வரை பயிர் ஆண்டாகும்

 முந்தைய ஆண்டைவிட வெங்காய சாகுபடி, 27% அதிகரித்து 3.08 கோடி டன்னாகி உள்ளது

 அதிக சாகுபடி, சீரான போக்குவரத்து காரணமாக வெங்காயம் விலை உயர்வு தவிர்ப்பு.

Advertisement