என்னை கொல்ல முயற்சி லாலு மகன் கதறல்

பாட்னா: பீஹாரில், தனி கட்சி நடத்தி வரும் முன்னாள் மு தல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் தன்னை கொல்ல முயற்சிப்பதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால், கட்சியில் இருந்து கடந்த மே மாதம் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இதையடுத்து செப்டம்பரில், ஜனசக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. தேர்த லுக்கு பின் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணிக்கு தார்மீக ஆதரவு தருவதாக அறிவித்தார்.

இந்நிலையில், தேஜ் பிரதாப் கட்சிக்கு எதிராக அவரது கட்சியின் செய்தித்தொடர்பாளர் சந்தோஷ் ரேணு யாதவ் பேச துவங்கினார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கினார்.

அதிலிருந்து தனக்கு எதிராக சந்தோஷ் ரேணு யாதவ் சமூக வலைதளத்தில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தேஜ் பிரதாப் யாதவ் போலீசில் புகாரளித்துள்ளார்.

மேலும், தனக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பீஹார் துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான சாம்ராட் சவுத்ரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement