வங்கதேசத்தில் ஹிந்து தொழிலாளி சுட்டுக்கொலை : ஒரே மாதத்தில் 3வது சம்பவம்

4


டாக்கா; வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.


வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது ஹிந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் நேற்று கடுமையாக தாக்கி கொன்றனர்.


இந் நிலையில் வங்கதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். கொல்லப்பட்டவர் பெயர் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்பதாகும். இவர் ஆடை தொழிற்சாலையில் பாதுகாவலாளியாக இருந்து வந்தார்.


இந்த சம்பவம் மைமென்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்ற இடத்தில் நடந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவரை சுட்டுக்கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா (29)என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுடுவதற்கு பயன்பத்திய சிறியரக துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement