தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு

27


பல்லடம் : பல்லடம் அருகே நடந்த தி.மு.க., மகளிர் மாநாட்டில், பயன்படுத்திய பின் துாக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளால், கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டையில், தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை முன்னிட்டு, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சீருடை, காலை மற்றும் மதிய உணவு, தண்ணீர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ், சிப்ஸ், மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களும் வழங்கப்பட்டன.


பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார், மாநாட்டு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. பயன்படுத்திய பின் அவற்றை முறையாக அப்புறப்படுத்துவதற்கு குப்பை தொட்டி வைக்கப்படவில்லை. இதன் காரணமாக, லட்சக்கணக்கான குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், மாநாடு நடந்த இடத்தில் குவியல் குவியலாகக் கிடந்தன. அவற்றை துாய்மை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement