காஞ்சிபுரம் பட்டு சேலையில் ஜரிகையின் தரம் குறைகிறது; தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காரணம்

2


காஞ்சிபுரம்: தங்கம், வெள்ளியின் விலை ஏற்றம் காரணமாக, ஜரிகையில் அவற்றின் அளவை சற்று குறைத்து உற்பத்தி செய்ய, கைத்தறி துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பட்டு சேலையில் ஜரிகையின் தரம் குறைகிறது.

காஞ்சிபுரத்தில் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. அவற்றை வாங்க, வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகின்றனர். பட்டு சேலை உற்பத்திக்கு, கைத்தறி சங்கங்களிலும், தனியாரிடமும், 30,000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணியாற்றுகின்றனர். மூலப்பொருட்கள் விற்பனை, சாயமிடுதல் என, நெசவு பணியின் பிற தொழில்களை நம்பியும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.



சமீப ஆண்டுகளாக தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காரணமாக, ஜரிகை விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், பட்டு சேலை நெய்வதற்கு முக்கிய மூல பொருளான ஜரிகை விலையும் ஏறியதால், பட்டு சேலை விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் தனியார் மற்றும் கூட்டுறவு கைத்தறி சங்கங்களில், பட்டு சேலை விற்பனை மந்தமாக உள்ளது. இந்நிலையில், ஜரிகையில் சேர்க்கப்படும் தங்கம், வெள்ளியின் அளவை சற்று குறைத்து பட்டு சேலைகளை உற்பத்தி செய்ய, கைத்தறி துறை உத்தரவிட்டுள்ளது.


ஆனால், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஜரிகை உற்பத்தி நிலையத்தில், புதிய ஜரிகையை உற்பத்தி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணத்தால், ஒரு மாதமாகவே பணி கிடைக்காமல், நெசவாளர்கள் தவித்து வந்தனர். பணி வழங்காததால் பொறுமையிழந்த 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், வழக்கறுத்தீர்ஸ்வரர் கோவில் தெருவில் உள்ள அண்ணா பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கைத்தறி துறை துணை இயக்குநர் மணிமுத்து மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தியும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, ஓரிக்கை பகுதியில் செயல்படும் ஜரிகை உற்பத்தி மையத்தில் இருந்து, 50 மார்க் எனும் 12.1 கிலோ ஜரிகையை எடுத்து வந்து, நெசவாளர்களுக்கு பிரித்து கொடுத்தப்பின், அனைவரும் கலைந்து சென்றனர்.



நெசவாளர்கள் கூறியதாவது: சில மாதங்களாகவே, பட்டு சேலை உள்ளிட்டவற்றுக்கு ஜரிகை வழங்காமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் பெரிய சேலை, சிறிய சேலை என எதையுமே நெய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து வந்தோம். போராட்டத்திற்கு பின், சொற்ப அளவிலே கொடுத்துள்ளனர்.


தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகையின் அளவை குறைப்பதால் தரம் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், பட்டு சேலை வியாபாரம் 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் உயரும், தங்கம், வெள்ளி விலை காரணமாக, ஜரிகையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் கைகொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். இவ்வாறு அவர்கள் கூறினர்.


@block_P@

பணி முடங்காது

ஜரிகையில் தங்கம், வெள்ளி அளவை குறைக்க அரசாணை வந்துள்ளது. ஜரிகையில் தங்கத்தின் அளவு 0.5 அளவில் இருந்து 0.4 ஆகவும், வெள்ளியில் 40 சதவீதத்திற்கு பதிலாக 30 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. இதனால், ஜரிகை, பட்டு சேலை தரம் குறையாது. முதற்கட்டமாக 50 மார்க் ஜரிகையை நெசவாளர்களுக்கு வழங்கியுள்ளோம். இனி, பணி முடக்கம் ஏற்படாது. - மணிமுத்து, கைத்தறி துணை இயக்குநர்.block_P

Advertisement