விவசாயிகளைக் கண்ணீரில் மிதக்கவிடும் திமுக; தினமலர் இணையதளம் செய்தியை மேற்கோள் காட்டிய நயினார்!

4

சென்னை: மக்காச் சோள விவசாயிகளைக் கண்ணீரில் திமுக மிதக்கவிடுகிறது என தினமலர் செய்தியை மேற்கோள் காட்டி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.



வெளி மாநிலத்தில் இருந்து அதிகளவில் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்படுவதால் விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிர்கள் நன்கு விளைந்தும் உரிய விலை கிடைகாததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் என தினமலர் இணைய தளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.


இந்த செய்தியை மேற்கோள் காட்டி நயினார் நாகேந்திரன் கூறியதாவது: மக்காச் சோள விவசாயிகளைக் கண்ணீரில் திமுக அரசு மிதக்கவிடுகிறது. விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி எனத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறை மக்காச் சோளம் அமோகமாக விளைந்துள்ள நிலையில், திமுக அரசின் அலட்சியத்தால் உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர் விவசாயிகள்.


ஒருபுறம் நமது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.2,400 குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்து வரும் வேளையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசோ மக்காச் சோளத்திற்கான நேரடி கொள்முதல் நிலையங்களைக் கூட அமைக்காமல், வியாபாரிகளின் சிண்டிகேட்டில் சிக்கித் தவிக்கவிட்டு, விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகிறது. மேலும், மக்காச் சோளத்தின் விலை வீழும் போது, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ரூ.250 வரை இழப்பீடு வழங்கும் வேளையில், திமுக அரசோ மக்காச் சோள உற்பத்தியை ஊக்குவிக்க எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்காமல் மக்காச் சோள விவசாயிகளின் கண்ணீரை வேடிக்கை பார்த்து வருகிறது.


படைப்புழு தொடங்கி காட்டுப் பன்றி வரை பலவற்றின் தாக்குதலில் அவதியுற்ற போதும் துயர் நீக்க தோள் கொடுக்காததோடு, தனது திறனற்ற நிர்வாகத்தால் மேலும் நிலைகுலையச் செய்யும் திமுக அரசு என்னும் கள்ளிச்செடியை வரும் தேர்தலில் களையெடுப்பர் மக்காச் சோள விவசாயிகள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement