தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் காங்.,க்கு சாதகம்: ராகுல் மகிழ்ச்சி

7


புதுடில்லி: தெலுங்கானாவில் 7 மாநகராட்சிகள் மற்றும் 116 நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ராகுல் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.


தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு நடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது.இந்நிலையில், ஹைதராபாத் மாநகராட்சியை தவிர்த்து தெலுங்கானாவில் உள்ள ஏழு மாநகராட்சிகள்,116 நகராட்சிகளுக்கு கடந்த 11ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. காங்கிரஸ், பாஜ, பாரதிய ராஷ்ட்ரீய சமீதி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது. சுமார் 13 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 52 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.
இதில் பதிவான ஓட்டுகள் நேற்று( பிப்.,13) எண்ணப்பட்டன.

நகராட்சி



அதில் 32 மாவட்டங்களில் உள்ள 116 நகராட்சிகளில் உள்ள மொத்தம் 2,582 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 1,347 வார்டுகளில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்ட்ரீய சமீதி 716 வார்டுகளிலும், பாஜ 261 வார்டுகளிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 257 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மாநகராட்சி



காங்கிரஸ் 4 மாநகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. கரீம் நகர், மற்றும் நிசாமாபாத் மாநகராட்சிகளில் அதிக வார்டுகளில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இங்கு பிஆர்எஸ் கட்சிக்கு போதிய வெற்றி கிடைக்கவில்லை. மற்றொரு மாநகராட்சியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இங்கு மேயரை தேர்வு செய்ய பிப்.,16ல் தேர்தல் நடக்க உள்ளது.

திருநங்கை வெற்றி



இந்த தேர்தலில் சித்யாலா மாநகராட்சியில் வார்டு ஒன்றில் போட்டியிட்ட நகிலா சுதாகர் என்ற திருநங்கை 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சுயேச்சைகள் ஆதிக்கம்



30 நகராட்சிகளில் அதிக சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், அங்கு நகராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கு அவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனையடுத்து அங்கு முக்கிய கட்சிகள், கவுன்சிலர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

மகிழ்ச்சி



இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தெலுங்கானா உள்ளாட்சி தேர்தல் முடிவுகளானது, சமூக நீதி கண்ணயம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வேரூன்றிய காங்கிரஸ் அரசின் மக்கள் முன்னுரிமை கொள்கைகளுக்கு கிடைத்த தெளிவான அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்களுக்கும் தெலுங்கானாவுக்கும் சொந்தமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பாஜ கருத்து



இந்த வெற்றி தொடர்பாக பாஜ மாநில தலைவர் ராமசந்தர் ராவ் கூறுகையில், அதிகார துஷ்பிரயோகம் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசின் ஆதிக்கத்தை தாண்டி பாஜ வளர்ச்சி பெற்று வருவதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. கட்சியின் ஓட்டு சதவீதம் 13 ல் இருந்து 20 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் ஆதரவு காரணமாக பல இடங்களில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற நக்சலைட்கள், கம்யூனிஸ்ட்கள், ஏஐஎம்ஐஎம் ஆகியவைகள் ஒருங்கிணைந்து பாஜவை தோற்கடித்தன என்றார்.

Advertisement