அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது... திமுக காங்கிரசுக்கு அடிமை; பிரசாரத்தில் இபிஎஸ் விளாசல்

10

பவானிசாகர்: அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது, ஆனால் திமுக காங்கிரசுக்கு அடிமை என்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

ஈரோடு பவானிசாகர் தொகுதி அரியப்பம்பாளையத்தில் அவர் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது இபிஎஸ் பேசியதாவது;

அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது, ஆனால் திமுக காங்கிரசுக்கு அடிமை. இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி நிலைப்பது சந்தேகம்தான். இந்த கூட்டணி ஆட்டம் கண்டுவிட்டது. பழம் தானாக பழுக்க வேண்டும். அப்போது தான் சுவை. நான் படிப்படியாக உழைத்து முதல்வர் ஆனவன். ஆனால் ஸ்டாலின் அப்பா வழியில் முதல்வர் ஆனவர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, போதை பொருட்கள் நடமாட்டம், பெண்கள் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. ஏழைகளிடம் கொள்ளையடித்து டாஸ்மாக்கில் ஊழல் செய்து, அந்த பணத்தை எடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளனர்.

நாங்கள் திட்டங்களை கொடுத்து மக்களை சந்திக்கிறோம். ஆனால் திமுகவுக்கு அதுபோன்று சொல்வதற்கு எதுவும் இல்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இந்த ஆட்சியில் எதுவுமே மக்களுக்கு செய்யவில்லை. அதிமுக ஆட்சியின் போது 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

10 ஆண்டுகளில் 7 சட்டக்கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 28 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம், தலைவாசலில் ரூ.1000 கோடியில் கால்நடை பூங்கா ஆகியவற்றை திறந்து, படிப்போரின் எண்ணிக்கையை உயர்த்தினோம்.

2030ல் அடைய வேண்டிய இலக்கை 2019-20ல் அடைந்தோம். அதிமுக ஆட்சியில் 100க்கு 52 பேர் உயர்கல்வி படித்தனர்.அதிமுக ஆட்சியில் 2 முறை விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சியில் இந்த புள்ளி விவரம் 52 என்பதில் இருந்து 48 சதவீதமாக குறைந்துவிட்டது. இன்று அரசுத்துறைகளில் ஐந்தரை லட்சம் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.ஆட்சிக்கு வந்தவுடன் இந்த பணியிடங்களை நிரப்புவோம் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் அப்படி செய்தாரா?

இதுவரை 1 லட்சம் பேர் தான் பணியிடங்களில் நிரப்பி உள்ளோம் என்று கூறியுள்ளார். 1 லட்சம் பேர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்களுக்கு பதிலாக தான் 1 லட்சம் பேரை நியமித்துள்ளார். ஆனால் கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. ஐந்தரை லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் அப்படியே இருக்கிறது. அதனால் தான் அரசின் நிர்வாகம் சரியில்லாமல் உள்ளது.

மின்கட்டணம் 62 சதவீதம் உயர்ந்துள்ளது. நகராட்சியில் குப்பைக்கு வரி,குடிநீர் கட்டணம் உயர்வு என வரி மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. விலைவாசி விண்ணை முட்டுகிறது. அரிசி, எண்ணெய், பருப்பு விலைகள் உயர்ந்துவிட்டன. இதை பற்றி எல்லாம் ஸ்டாலினுக்கு சிந்திக்க நேரம் இல்லை.

அவர் தமது வீட்டு மக்களை பற்றி தான் சிந்திப்பார். இதுவே அதிமுக ஆட்சியில் விலைக் கட்டுப்பாட்டு நிதியம் ஒன்றை உருவாக்கி விலை உயர்வை சரி கட்டினோம். அதிமுக ஆட்சியை விட, இப்போதுள்ள ஆட்சியில் 1 லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதலாக வரி வருவாய் வருகிறது. ஆனால் மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கவில்லை.

வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுக மீது துணை முதல்வர் அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். பிரதமர் மோடி தமிழகம் வருகின்ற போது அன்றைக்கு திமுக எதிர்க்கட்சி.அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் கருப்பு பலூன் விட்டார், கருப்புக் கொடி காட்டினார். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வெள்ளைக் குடை பிடித்தார். ஆளும்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.

இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement