தி.மு.க., கூட்டணியில் ஐந்து தொகுதிகள் கேட்கிறது மனித நேய மக்கள் கட்சி

சென்னை: ''தி.மு.க., கூட்டணியில், ஐந்து தொகுதிகள் கேட்க உள்ளோம்,'' என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு பின், ஜவாஹிருல்லா அளித்த பேட்டி:

பொதுக்குழுவில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை, 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உட்பட, 19 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மத்திய பா.ஜ., அரசு பல்வேறு நெருக்கடிகளை தந்தாலும், பல்வேறு துறைகளில் தமிழகம் உயர்ந்து நிற்கிறது. எனவே, தி.மு.க., ஆட்சி, தமிழகத்தில் தொடர வேண்டும்.

தற்போது சட்டசபை மற்றும் பார்லிமென்டில், சிறுபான்மை முஸ்லிம்களின் பிரதிநிதித் துவம் குறைகிறது.

சட்டசபை தேர்தலில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை, தி.மு.க., மற்றும் இதர கூட்டணி கட்சியினரும், வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.

தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சிக்கு, ஐந்து தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

கடந்த தேர்தலில், தி.மு.க., ஒதுக்கிய மணப்பாறை, பாபநாசம் தொகுதிகளில், 100 சதவீதம் வெற்றி பெற்றோம். எனவே, ஐந்து தொகுதிகள் கோரிக்கையை, தி.மு.க., தலைமை பரிசீலிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு பொருந்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement