நெரிசலான பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து அரசு கட்டடங்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே நெரிசலான பகுதியில் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில் ரோட்டை ஆக்கிரமித்து அரசு கட்டடங்கள் கட்டப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் சக்கராஜா கோட்டை, ஜவகர் மைதானம், சங்கரன்கோவில் முக்கு பகுதி நகரின் பிரதான போக்குவரத்து நிறைந்த பகுதி. இப்பகுதியில் இரண்டு மாதம் முன்பு ரூ.10 லட்சம் செலவில் எம்.எல்.ஏ நிதியில் புதிய பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது.

இதன் எதிரே டிரான்ஸ்பார்மர் ரோட்டின் ஒரு பகுதியை அடைத்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பஸ் ஸ்டாப் பணிகள் முடிந்தது. தற்போது நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இது இதன் அருகிலேயே தொழிலாளர் நலத்துறை சார்பில் நல வாரிய கட்டுமானத்திற்கான புதிய பணி நடந்து வருகிறது.

ஏற்கனவே சங்கரன்கோவில் முக்கிலிருந்து பஸ் ஸ்டாப் வரை தள்ளுவண்டி கடைகள் நிரந்தரமாக கூரை அமைத்து ஆக்கிரமித்துள்ள நிலையில் புதிய கட்டடம் தொடங்கி இருப்பது இப்பகுதியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கணேசன்: கனரக வாகனங்கள் புது பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பும் பஸ்களுக்கான முக்கிய பாதையாக இப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே அமைந்த பஸ் ஸ்டாப்பும் இடையூறாக உள்ள நிலையில் நெடுஞ்சாலை ஓரம் நிரந்தர ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துள்ளன.

அலுவலக நேரங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ள சூழலில் தற்போது நலவாரிய அலுவலகம் என கூறி கட்டடப் பணி தொடங்கப் பட்டுள்ளது. இடையூறான இப் பகுதியில் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் புதிதாக கட்டுமானம் முளைப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement