கமேனியை கொன்றது எப்படி: அமெரிக்கா, இஸ்ரேல் தீட்டிய ரகசிய திட்டம்

2

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் மதகுரு கமேனி கொல்லப்பட்டார். இதற்கான தாக்குதல் திட்டம் எப்படி வகுக்கப்பட்டது என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஈரானில் உயரிய அதிகாரம் பெற்ற நபராக மதகுரு கமேனி திகழ்ந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் ரகசியமான இடத்திலேயே வாழ்ந்து வந்தார். முக்கியமான நேரத்தில் மட்டுமே பொது வெளியில் தலைகாட்டினார். அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். ஆனால், முடியாமல் இருந்தது.



கடந்த சில நாட்களாக அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக பல மாதங்களாக அமெரிக்கா திட்டமிட்டு வந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரமலான் மாதத்தில் தாக்குதல் துவக்கப்பட்டு உள்ளது.கமேனியை குறிவைத்தே இந்த தாக்குதலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் துவக்கின.இந்த முறையும் அவரை விட்டால், அவர் ரகசிய இடத்தில் சென்றுவிடுவார் என அமெரிக்கா கருதியது.தாக்குதல் துவக்கப்பட்ட நாள் அன்று, காலை ஈரான் முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது. ஈரான் அதிபர், பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கூட்டத்தில் கமேனி பங்கேற்க இருந்தார். இதனை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.



அன்றைய தினம் மாலையில் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள், காலையிலையே, கூட்டம் நடக்க இருந்த இடத்தை குறிவைத்து தாக்குதலை துவக்கினர். இதற்கு டிரம்ப்பும் ஒப்புதல் கொடுத்தார்.


இஸ்ரேல் நேரப்படி காலை 6 மணிக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் கிளம்பின. சரியாக காலை 9 : 40 மணிக்கு டெஹ்ரானில் கூட்டம் நடந்த இடத்தை ஏவுகணைகள் துல்லியமாக தாக்கின. இந்த தாக்குதலில் அந்த கட்டடம் சேதம் அடைந்துள்ளதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த தாக்குதலில் கமேனி, அவரது மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் மீடியாக்கள் உறுதி செய்துள்ளன. இந்த தாக்குதலில், கமேனியின் ஆலோசகர், ஈரான் படைகளின் தலைவர் முகமது பக்போர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.



இதற்கு பழிவாங்க போவதாக ஈரான் கூறியுள்ளது. அப்படி செய்தால் பதிலடி கடுமையாக இருக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

Advertisement