ஐடி முதல் தடய அறிவியல் வரை; பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வழிநடத்தும் ஈஷா!

கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள சூர்யகுண்ட மண்டபத்தில் பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு 'சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை' வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈஷா அறக்கட்டளை சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அந்த வரிசையில், இந்த ஆண்டு சீங்கபதி, சாடிவயல், நல்லூர்பதி, முள்ளங்காடு, தானிக்கண்டி, மடக்காடு, சர்க்கார்போரத்தி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியினக் குடியிருப்புகள் மற்றும் போளுவாம்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையினை ஈஷா பிரம்மச்சாரிகள் வழங்கினர்.
Latest Tamil News
ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொருளாதாரம் அல்லது குடும்பச் சூழல் காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் பி.எஸ்.ஜி, ராமகிருஷ்ணா, வி.எல்.பி ஜானகியம்மாள், கலைமகள், அவினாசிலிங்கம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகளில் மேற்கல்வி பயின்று வருகின்றனர். இதில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் அடங்குவர்.
Latest Tamil News
குறிப்பாக, இளங்கலை வணிகவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தடய அறிவியல் மற்றும் குற்றவியல், விமான நிலைய மேலாண்மை, தாவரவியல், வேதியியல் மற்றும் ஆங்கில இலக்கியம் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து இம்மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஈஷா கல்வி உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமில்லாமல், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சி, மென்பொருள் துறை சார்ந்த பயிற்சிகள், வேலைக்கான நேர்காணல்களில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் மற்றும் 'சயின்ஸ் ஸ்பார்க்' என்ற பெயரில் அறிவியல் தொடர்பான பல்வேறு சிறப்புப் பயிற்சிகளையும் இந்த மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளையும் ஈஷா இலவசமாக வழங்கி வருகிறது.
Latest Tamil News
இத்திட்டத்தின் மூலம் பயின்ற பல மாணவர்கள் இன்று ஐடி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பொறியாளர்கள், கணக்காளர்கள், முன்னணி மருத்துவமனைகளில் செவிலியர் மற்றும் ஈஷா யோக மையத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

இவ்விழாவில் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் அவர்களது பெற்றோர், முந்தைய ஆண்டுகளில் கல்வி உதவித் தொகை பெற்று தற்போது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்கள் தங்களின் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இதனுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழாவின் அனைத்து அம்சங்களையும் மாணவர்களே முன்னின்று ஒருங்கிணைத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement