பாலக்காடு - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில்; மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி

4

சென்னை: பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே மின்சாரப் பயணிகள் ரயில் இயக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி மற்றும் ரயில்வேத்துறை அமைச்சருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்தார்.

அவரது அறிக்கை; சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன்.

அதன்படி,

1) பாலக்காடு- பொள்ளாச்சி MEMU (மின்சாரப் பயணிகள் ரயில்கள்)

2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் ரயில்

3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில்

4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு ரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன.


மேலும்,

1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு ரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

2) தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு ரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மேலும்,

1) திருச்சி- காரைக்குடி பயணிகள் ரயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.

2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு ரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் மோடிக்கும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement