சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிப்பு!

10


புதுடில்லி: சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், லோக்சபாவில் இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டது.

சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத், எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பதிலடி கொடுத்து ஆவேசமாக பேசினார்.






அவர் கூறியதாவது; நாட்டின் நலன்களில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் கூறுவது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளாகும். பிரதமர் மோடி ஒருபோதும், எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும், தனிப்பட்ட அரசியல் மோதல்களுக்காக பார்லியை தவறாக பயன்படுத்த வேண்டாம். சபாநாயகருக்கு எதிரான இந்தத் தீர்மானம், சில தலைவர்கள் அல்லது சில குழுக்களின் கர்வத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.






கேள்வி கேட்க பணம் வாங்கியதற்காக 11 எம்பிக்கள் நீக்கப்பட்டனர், அவையில் மிளகுத்தூள் தூவப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்த போதிலும், தற்போது நடப்பது போன்ற நாடகப் போராட்டங்களை இதுவரை நான் பார்த்ததில்லை, என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து விவாதம் முடிவில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. அவையில் பாஜ தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement