சாந்தி வனத்தில் தகனம் கைவசம் சிலிண்டர்கள்

மேட்டுப்பாளையம்: 'மேட்டுப்பாளையம் நகராட்சி சாந்திவனத்தில், உடல்களை தகனம் செய்ய தேவையான காஸ் சிலிண்டர்கள் இருப்பு உள்ளது' என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரில், நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம் பிள்ளை மயானத்தில், சாந்திவனம் உள்ளது. இங்கு சடலங்களை, வணிக ரீதியான காஸ் சிலிண்டர்கள் வாயிலாக தகனம் செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம், சாந்திவனத்தை நிர்வகித்து வருகிறது.

தற்போது வணிக சிலிண்டர் தட்டுப்பாடால், விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது. சாந்திவனத்தில் சிலிண்டர்கள் மிகவும் குறைவாக இருந்தன. அத்தியாவசிய தேவை என்பதால், வணிக ரீதியான சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, வழக்கமாக சாந்தி வனத்திற்கு சிலிண்டர் சப்ளை செய்யும் காஸ் ஏஜென்சி, குறிப்பிட்ட சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன. இதனால், சடலங்களை தகனம் செய்ய, போதிய சிலிண்டர்கள் இருப்பு உள்ளது என, சாந்திவனம் மேலாளர் சுலோச்சனா கூறினார்.

Advertisement