தேசிய உள்ளரங்கு தடகளம் * புவனேஸ்வரில் இன்று ஆரம்பம்

புவனேஸ்வர்: இந்தியாவில் முதன் முறையாக தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது.
சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில், வரும் 2028, மார்ச் 3-5ல் உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப், இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்தியாவில் முதன் முறையாக, இன்று ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் துவங்குகிறது.
இந்தியாவில் உள்ளரங்கு தடகளம் குறித்து அதிகம் அறியப்படாமல் உள்ளது. மைதானம், வழக்கமான 400 மீ., டிராக் கொண்டதாக இல்லாமல், 200 மீ., துாரத்துடன், அளவு சிறியதாக இருக்கும். டிராக் அளவின் நீளம் 100 மீ., க்குப் பதில் 60 மீ., மட்டும் இருக்கும்.
உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், போல் வால்ட், டிரிபிள் ஜம்ப், குண்டு எறிதல் போட்டிகள் இடம் பெற்றிருக்கும். மாறாக ஈட்டி எறிதல், குண்டு எறிதல் இருக்காது. இதனால் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), 3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ்' வீரர் அவினாஷ் சபிள் பங்கேற்க மாட்டர்.
இரண்டு நாள் நடக்க உள்ள இப்போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 300 க்கும் மேற்பட்டோர் களமிறங்குகின்றனர். தேசிய சாதனை படைத்த அனிமேஷ் குஜுர் (100, 200 மீ.,), தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்) பங்கேற்கின்றனர்.

'ஓவல்' மைதானம்
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானம், உள்ளரங்கு போட்டிகள் நடத்தும் வகையில் முதன் முறையாக தயாராகி உள்ளது.
* 200 மீ., 'சின்தடிக் டிராக்' நீள்வட்ட ('ஓவல்') வடிவத்தில் உள்ளது.
* மைதானம் முழுவதும் 'ஏசி' வசதி செய்யப்பட்டு, உலகத் தரத்தில் உள்ளது.
* இம்மைதானத்தில் மொத்தம் 1700 பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்கலாம்.

Advertisement