நிறுவன சட்டத்தில் திருத்தம் பார்லி.,யில் மசோதா தாக்கல்

புதுடில்லி :நிறுவன சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தாக்கல் செய்தார்.

தொழில் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுவதை எளிதாக்கும் வகையிலும், டிஜிட்டல் முறையிலான கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையிலும் இந்த மசோதாவில் பல்வேறு மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.

கடந்த 2013ம் ஆண்டின் நிறுவன சட்டம் மற்றும் 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, எல்.எல்.பி., எனப்படும் வரையறு பொறுப்பு கூட்டாண்மை சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர இந்த மசோதா வழிவகை செய்கிறது.

குறிப்பாக, நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஏற்படும் சிறிய தவறுகளுக்கு கிரிமினல் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து, அபராதங்களை விதிக்க இந்த மசோதா முன்னுரிமை அளிக்கிறது. இந்த திருத்தங்கள் வாயிலாக, நிறுவனங்கள் தங்களது பங்குகளை திரும்ப பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

ஒரே ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பங்குகளை திரும்ப பெற அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 'இ .எஸ். ஓ.பி.,' எனப்படும் பணியாளர் பங்கு விருப்ப திட்ட விதிகளிலும் கூடுதல் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருத்தத்தின் வாயிலாக, ஆவண தாக்கல்கள் இனி முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்படும் என்பதால், அவற்றை ஒழுங்குமுறை அமைப்புகள் உடனுக்குடன் கண்காணிக்க முடியும்.

தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம் மற்றும் திவால் வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கவும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

@block_B@ சிறு நிறுவனங்களுக்கு சவால் இந்த சட்டத்திருத்தங்கள் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தாலும், அடிக்கடி மாறும் டிஜிட்டல் விதிகளுக்கு ஏற்ப சிறு நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் தங்களை மாற்றி கொள்வதில் சில சவால்களை சந்திக்க கூடும். இதற்காக, சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை அவர்கள் பெற வேண்டியிருக்கும். இது, சிறு நிறுவனங்களின் செலவுகளை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.block_B

Advertisement