கேப்டன் அக்சர் படேலுக்கு பிடிக்கல... * 'இம்பேக்ட்' வீரர் விதிமுறைக்கு எதிர்ப்பு

புதுடில்லி: ''பிரிமியர் தொடரில் இடம் பெற்றுள்ள 'இம்பேக்ட்' வீரர் விதிமுறை பிடிக்கவில்லை,'' என அக்சர் படேல் தெரிவித்தார்.
இந்திய 'டி-20' அணியின் துணை கேப்டன் அக்சர் படேல், 32. கடந்த 2024ல் 'டி-20' உலக கோப்பை, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி, 2026ல் மீண்டும் 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். சிறந்த 'ஸ்பின் ஆல்-ரவுண்டரான' இவர், பேட்டிங், பீல்டிங்கிலும் அசத்துவார்.
வரும் 28ல் துவங்கும் பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரில் டில்லி அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். முதல் முறையாக கோப்பை வெல்லும் இலக்குடன் உள்ளார். இத்தொடரில் இடம் பெற்றுள்ள 'இம்பேக்ட்' வீரர் விதிமுறை சர்ச்சைக்குரியது. விளையாடும் 'லெவனில்' உள்ள எந்த ஒரு வீரருக்கும் பதிலாக வேறு ஒருவரை களமிறக்கி கொள்ளலாம். இதனால் 'ஆல்-ரவுண்டர்'களுக்கான முக்கியத்துவம் குறைகிறது.
இது பற்றி அக்சர் படேல் கூறுகையில்,''பேட்டிங், பவுலிங் தெரிந்த 'ஆல்-ரவுண்டரை' முன்பு தேர்வு செய்தோம். இப்போது 'ஸ்பெஷலிஸ்ட்' பேட்டர், பவுலர்களை தேர்வு செய்கின்றனர். போட்டியின் தேவைக்கு ஏற்ப பவுலர் அல்லது பேட்டரை 'இம்பேக்ட்' வீரராக களமிறக்குகின்றனர். இதனால், 'ஆல்-ரவுண்டருக்கான' அவசியம் இல்லாமல் போகிறது. 'ஆல்-ரவுண்டர்' என்ற முறையில் எனக்கு 'இம்பேக்ட்' வீரர் விதிமுறை பிடிக்கவில்லை. இருப்பினும் விதிமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது.
பிரிமியர் தொடரில் சாதிப்பது கடினம். அன்னிய வீரர்களும் இடம் பெற்றிருப்பதால், பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படும். கடந்த தொடரில் 204 பந்துகள் தான் வீசினேன். இதற்கு 'இம்பேக்ட்' விதிமுறை காரணமல்ல. சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும், எனது விரலில் காயம் ஏற்பட்டதால், பந்தை சுழற்ற முடியவில்லை. அவசியம் ஏற்பட்டால் மட்டும் பந்துவீசினேன்.
இம்முறை துவக்க வீரராக ராகுல் களமிறக்கப்படுவார். என்னை பொறுத்தவரை அணியின் தேவைக்கு ஏற்ப 'மிடில் ஆர்டர்' அல்லது 'பினிஷராக' வருவேன். டில்லி அணியினர் 100 சதவீத திறமையை வெளிப்படுத்தினால், கோப்பை கைப்பற்றலாம்,''என்றார்.

பும்ரா காயமா
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 32. பிரிமியர் தொடரில் மும்பை அணியில் இடம் பெற்றுள்ளார். போட்டி துவங்க ஐந்து நாள் மட்டும் உள்ள நிலையில் பும்ரா, இன்னும் மும்பை அணியில் இணையவில்லை.
இவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம். ஏனெனில் பும்ரா தற்போது, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், உடற்தகுதி தேர்வில் உள்ளார். கடந்த சீசனில் பும்ரா, மும்பை அணிக்காக துவக்க கட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை. இது இம்முறையும் தொடரலாம்.

சரியான கூட்டணி

அக்சர் படேல் கூறுகையில்,''இந்திய அணி தொடர்ந்து இரு 'டி-20' உலக கோப்பை வென்றதால், 2000ல் ஒருநாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடுகின்றனர். 2022ல் இருந்து துணிச்சலாக விளையாடுகிறோம். இதே பாணியிலான ஆட்டத்தை தொடர வேண்டும். அனைத்து காலத்திற்குமான சிறந்த இந்திய 'டி-20' அணி என குறிப்பிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சரியான கூட்டணி அமைந்துவிட்டால், அற்புதங்கள் நிகழ்த்தலாம்,''என்றார்.

நடராஜன் வாய்ப்பு
டில்லி அணியில், 'வேகப்புயல்' ஸ்டார்க் இடம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த முறை 11 போட்டியில் 14 விக்கெட் வீழ்த்தினார். இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. இவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் இடம் பெறலாம். கடந்த முறை தோள்பட்டை காயம் காரணமாக நடராஜன், இரு போட்டிகளில் தான் பங்கேற்றார்.
இது பற்றி அக்சர் படேல் கூறுகையில்,''ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் அனுமதி கிடைத்தால், எங்களது முதல் போட்டிக்கு (ஏப். 1, எதிர், லக்னோ) முன்பாகவே ஸ்டார்க் வந்துவிடுவார். காயத்தில் இருந்து மீண்ட நடராஜன் 100 சதவீத உடற்தகுதியுடன் உள்ளார். சரியான அணியை தேர்வு செய்வோம்,'' என்றார்.

Advertisement