பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: தமிழகத்தில் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்; இலவசங்களை மக்களும் புறக்கணிக்க வேண்டும். இவை எல்லாம் நாளை வரியாகத்தான் மக்கள் தலையில் விடியும்.இலவசங்கள் வழங்கக்கூடாது என, ஏற்கனவே வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், முதல்வரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளோம். இலவசங்கள் வழங்கக் கூடாது என்ற இவரது கோரிக்கையை, சென்னை விருகம்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருக்கும் இவரது மகன் பிரபாகர் ராஜா ஏத்துக்குவாரா?


அ.தி.மு.க.,வில் இருந்த போது தமிழக முதல்வர் பதவி வகித்தவரும், தற்போது தி.மு.க., உறுப்பினருமாக உள்ள, ஓ.பன்னீர்செல்வம் பேச்சு: வாழ்க்கை யில் நான் செய்த பெரிய தவறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பலரும் சொன்னபோது, அதை நான் ஏற்கவில்லை; நான் பழனிசாமிக்கு ஆதரவு தந்தேன். ஆனால், அந்த நன்றி இல்லாமல் என்னை அரசியலில் இருந்து விலக்க முயன்றார் .
ஆனாலும், அ.தி.மு.க., சார்பில் மூணு முறை முதல்வராக இருந்துட்டு, எம்.ஜி.ஆரை வெளியேற்றிய, தி.மு.க.,வில் நீங்க ஐக்கியமானதை, எம்.ஜி.ஆர்., - ஜெ.,யின் ஆன்மாக்கள் மன்னிக்குமா?

தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: அரசு விற்கும் மது என்ற நச்சு திரவம் உடல்நல கேடிற்கும், வன்முறைகளுக்கும், கொலை குற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. போதைப்பொருள் கடத்துபவர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் என, கைது செய்யப்பட்ட 11 முக்கிய குற்றவாளிகளில், தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட அரசியல் பின்புலங்களை பக்கபலமாக கொண்டவர்களே அதிகம். அரசே சாராயம் விற்பதால், அக்கட்சியின் நிர்வாகிகள் தங்கள் பங்குக்கு போதைப்பொருள் விற்பதை பயமில்லாமல், தடையில்லா மல் செய்கின்றனர்.

அரசே சட்டபூர்வமா போதைப் பொருட்களை விற்க முடியாது என்பதால், ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் அந்த வேலையை கையில் எடுத்துக்கிட்டாங்களோ?

காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி.,யின் தமிழக பொதுச்செயலர் ராஜேஸ்வரி அறிக்கை
: தமிழக ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் தேர்தல், 25 ஆண்டுகளாக நடக்காமல் இருந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, உறுப்பினர்கள் முறைப்படி ஓட்டளித்து, தலைவராக பன்னீர்செல்வம் மற்றும் 51 நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தேர்தலை எதிர்த்தவரது வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.

இனியாவது, ஜெயித்த நிர்வாகிகளை ஒழுங்கா நிர்வாகம் பண்ண விடுவாங்களா அல்லது அங்கயும் கோஷ்டிகள் சேர்த்து, சட்டை கிழிப்புன்னு இறங்கிடுவாங்களா?

Advertisement