பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தேத்தாம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பு
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தேத்தாம்பாக்கம் பகுதிகளில் தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் நேற்று தேத்தாம்பாக்கம் பள்ளிக்கூட வீதி, அம்பேத்கர் தெரு, நடுத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு, திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று 'தாமரை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் பூங்கள் துாவியும் வரவேற்பு அளித்தனர். பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், பொது மக்களிடம் தேத்தாம்பாக்கம் அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ரூ. 1.08 கோடி மதிப்பில் புதிதாக 4 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதி அமைத்தல், அமட்டன் குளம் இருளர் குடியிருப்பில் பல லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, தேத்தம்பாக்கம் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சகடை வண்டி செய்வதற்கு ரூ. 1. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளேன்.
இத்தேர்தலிலும் தன்னை மீண்டும் வெற்றி பெற செய்தால், கிராமத்தில் கிடப்பில் உள்ள அனைத்து நலத்திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என, ஓட்டு சேகரித்தார்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.