கால்நடைகள் பாதுகாப்பு டாக்டர்கள் அறிவுரை

உடுமலை: கால்நடைகளை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என, கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

கோடை காலங்களில் கால்நடைகளை பராமரிப்பது என்பது மிக முக்கியமானது. காரணம், அதிக உஷ்ணம் காரணமாக, கால்நடைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. எனவே, கால்நடைகளை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.

மாடுகளுக்கு தேவையான அளவு தண்ணீர் வழங்குவதுடன், தேவைப்பட்டால் அவற்றை குளிக்க வைப்பதும் சிறந்தது. வெயில் நிறைந்த பகல் நேரங்களில் தீவனங்களைத் தவிர்த்து, குளிர்ச்சியான மாலை நேரங்களில் வழங்கலாம்.

நேரடியாக வெயில் தாக்காத வகையில், மரத்தின் நிழல்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதும், கட்டி வைப்பதும் முக்கியம். புண்ணாக்கு, தவிடு மற்றும் மாவு பொருட்களை, நீரில் நனைத்தும் அல்லது ஊற வைத்தோ கொடுக்கலாம்.

கால்நடைகளை அடைத்து வைக்காமல், காற்றோட்டம் உள்ள கொட்டகையை பயன்படுத்த வேண்டும். இவை அனைத்தும், கால்நடைகளின் உடல் உஷ்ணமாவதை தடுத்து, ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.

கால்நடை விவசாயிகள், கோடைக்காலங்களில், மேற்கூறிய வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் விபரங்களுக்கு, அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகங்களை அணுகலாம்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement