முதல் கையெழுத்தில் ரூ.8 ஆயிரம் :தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி

கச்சிராயபாளையம்: 'முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்றவுடன் 8,000 ரூபாய் கூப்பன் வழங்கும் இல்லத்தரசி திட்டத்தை முதல் திட்டமாக துவங்குவார்' என சங்கராபுரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் உதயசூரியன் பேசினார்.

சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தியாகராஜபுரம், எஸ்.வி.பாளையம், ஊராங்கனி, பாவளம், மல்லாபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்று அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசுகையில், 'முதல்வர் கடந்த முறை பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தில் மகளிர் விடியல் பயண திட்டத்தை துவைக்கி வைத்தார். இதனால் தாய்மார்கள் பலர் இன்று வரை பயனடைந்து வருகின்றனர்.

அதே போல் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைத்த உடன் முதல் திட்டமாக இல்லத்தரசிகள் தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்குவதற்காக 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் செயல்படுத்துவார்.

மேலும் பெண்கள் உரிமை தொகை 2,000 ரூபாய், மாதந்தோறும் கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

மாநில மகளிர் அணி துணைச் செயலாளர், அங்கையர்கன்னி, ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜ், செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement