கட்சி கொடி வைப்பதில் பாரபட்சம்: வி.சி., கட்சியினர் திடீர் போராட்டம்

பொன்னேரி: கட்சி கொடி வைப்பதில் பாரபட்சமாக இருப்பதாக கூறி, வி.சி., கட்சியைச் சேர்ந்த சிலர், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி சட்டசபை தொகுதிக்கு, தி.மு.க., கூட்டணி சார்பில் காங்., கட்சி போட்டியிடுகிறது. நேற்று கோளூர், திருப்பாலைவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும், கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திருப்பாலைவனம் கிராமத்தில், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளின் கொடிகம்பங்கள் இருந்தன. ஆனால், வி.சி.,யின் கொடிகம்பங்கள் இல்லை எனக்கூறி, அக்கட்சியினர் சிலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி - பழவேற்காடு சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கொடிகம்பங்கள் வைக்கப்பட்டு, வி.சி., கட்சி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கூறினர்.

தகவலறிந்து வந்த திருப்பாலைவனம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement