ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் :அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் உறுதி

சோழிங்கநல்லுார்:“சோழிங்கநல்லுார் தொகுதியில், முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் சிக்னல் அமைக்கப்படும்,” என, அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் கூறினார்.

சோழிங்கநல்லுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன், நேற்று காலை -சோழிங்கநல்லுாரிலும், மாலை காரப்பாக்கத்திலும் பிரசாரம் செய்தார்.

அப்போது, கந்தன் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சியில், அரசு பதிவேடுகளில் பதிவேற்றாமல் கொடுக்கப்பட்ட போலி பட்டா போலல்லாமல், கிராம நத்தத்தில் வாழ்ந்த 7,000 பேருக்கு, பட்டா வழங்கியதோடு, 1,180 பேருக்கு வீடு கட்டி கொடுத்தேன்.

சோழிங்கநல்லுாரில் குடியிருப்புகள், ஐ.டி., நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை பெருகி வருவதால், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., போன்ற முக்கிய சாலைகளில், நவீனப்படுத்தப்பட்ட ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் ஏற்படுத்தப்படும்.

பொது மக்களின் குறைகளை தீர்க்க, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மொபைல் போன் செயலி அறிமுகம் செய்து, குறைகளை தீர்க்க மாதந்தோறும் முகாம்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், சோழிங்கநல்லுார் கிழக்கு பகுதி செயலர் பழனிவேல், கொள்கை பரப்பு துணைச் செயலர் லியோ சுந்தரம், பா.ம.க., மாவட்ட செயலர் நிர்மல்குமார், பா.ஜ., மாவட்ட தலைவர் குமார் மற்றும் வட்ட செயலர் புருஷோத்தமன், ராதாகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement