தில்லை கங்கா நகரில் மேம்பாலம் அமைக்கப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வாக்குறுதி

ஆலந்துார்: ஆலந்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நேற்று முன்தினம் நங்நல்லுார், பழவந்தாங்கல், நேற்று அய்யப்பன் தாங்கல் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் பேசியதாவது:

மத்திய அரசின் திட்டங்களை, 'ஸ்டிக்கர்' ஒட்டி தி.மு.க., அரசு செய்ததாக தம்பட்டம் அடித்து வருகிறது. மெட்ரோ ரயில் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் வந்தது.

தி.மு.க.,வினர் வழித்தடத்தை சுய லாபத்திற்காக மாற்றியதால், வேளச்சேரி- - மவுன்ட் மேம்பால ரயில் சேவை தாமதமானது.

பருவமழை, புயல் காலங்களில் ஆலந்துார் தில்லை கங்காநகர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம் சுரங்கப்பாலம் நீரால் மூழ்கிவிடும். நங்கநல்லுார், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, மடிப்பாக்கம், மூவரசம்பட்டு ஆகிய பகுதிகள் தனி தீவாகிவிடும்.

இதற்கு தீர்வாக, தில்லை கங்கா நகரில் 85 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்ட, அ.தி.மு.க., ஆட்சில் முடிவானது. அத்திட்டத்தை தி.மு.க., கிடப்பில் போட்டு விட்டது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் மேம்பாலம் கட்டப்படும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப இப்பகுதியில், 110 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை. ஆட்சி மாறியதும் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவருடன், பா.ஜ., மாவட்ட செயலர் குமார், மண்டல பொருப்பாளர் நந்தகுமார், பா.ம.க., பகுதி செயலர் முருகேசன். அ.ம.மு.க., பகுதி செயலர் ஹரி, தா.ம.க., வெங்கடேசன், அ.தி.மு.க., பகுதி செயலாளர்கள் பரணிபிரசாத், கோபாலகிருஜ்ணன், நரேஷ்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Advertisement