தி.மு.க., மீனவர்களுக்கு துரோகம் இழைத்தது; அ.தி.மு.க., காளியம்மாள் குற்றச்சாட்டு 

கடலுார்: கடலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து, சிங்காரத்தோப்பு பாலம் அருகில் கொள்கை பரப்பு துணை செயலாளர் காளியம்மாள் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில் மீனவ சமுதாயத்தினர், 5 இடங்களில் போட்டியிட அ.தி.மு.க., வாய்ப்பு வழங்கியுள்ளது. தி.மு.க., அரசு மீனவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. கடலுாரில் காங்., கட்சி போட்டியிடுகிறது.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த காங்., கட்சியை ஓட ஓட விரட்ட வேண்டும். காங்., ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.

தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'அபிடவிட்டில்' கையெழுத்து கூட போட ஆட்கள் இல்லாத கட்சியாக காங்., உள்ளது.

தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. தி.மு.க., ஆட்சியில் ஒரு மாவட்டத்தில் கூட சுனாமி குடியிருப்புகள் சீரமைக்கவில்லை.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, முதல்வராக பதவி வகித்த போது, 11 மருத்துவக் கல்லுாரி, 65க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 4 சட்ட கல்லுாரி, 4 வேளாண் கல்லுாரிகளை கொண்டு வந்தார்.

ஆனால், தி.மு.க., ஆட்சியில் 10,000 பள்ளிகள் மூடப்பட்டன. வேட்பாளர் சம்பத்தை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் குமார், மாநில மீனவரணி செயலாளர் தங்கமணி, மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், பா.ஜ., கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement