சமரச தீர்வு குறித்து வாகன பிரசாரம்

கோவை: நிலுவையிலுள்ள வழக்குகளில் நிரந்தர தீர்வுகாண, சமரச தீர்வு குறித்து வாகன பிரசாரம் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில், சமரச தீர்வு தினம் மற்றும் வாரம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துவங்கியது.

மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா கொடியசைத்து வாகன பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

பிரசார வாகனத்துடன் சட்ட கல்லுாரி மாணவர்கள், சமரச தீர்வு மைய ஊழியர்கள், இலவச சட்ட உதவி வக்கீல்கள் சென்று, சமரச தீர்வு குறித்து துண்டு பிரசுரம் வினியோகித்து வருகின்றனர்.

காந்திபுரம், உக்கடம் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை பகுதிகளில் வாகனம் நிறுத்தப்பட்டு, 'டிஸ்பிளே போர்டு' வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் முக்கிய இடங்களில் இந்த வாரம் முழுவதும் வாகன விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

நீண்ட காலம் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பு பேசி முடித்து, நிரந்தர தீர்வு காணலாம். வணிக வழக்குகள், நுகர்வோர் வழக்கு, குடும்ப வழக்கு, பணம் மற்றும் ஒப்பந்தம் சார்ந்த வழக்கு, ஒலிபரப்பு மற்றும் தொலை தொடர்பு சார்ந்த வழக்கு, காசோலை மோசடி, வாடகை மற்றும் சொத்து, சில குறிப்பிட்ட குற்ற வழக்குகளுக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

Advertisement