தபால் ஓட்டு பதிவில் முறைகேடு தேர்தல் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'

அணைக்கட்டு: அணைக்கட்டு தொகுதியில், முதியவர்களுக்கான தபால் ஓட்டில், முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு அரசு அலுவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, புத்துார் ஊராட்சி, ஈச்சங்காடு கிராமத்தில், நேற்று முன்தினம், முதியவர்களிடம் தபால் ஓட்டுகளை அதிகாரிகள் பெற்று சென்றனர்.

அப்போது, தபால் ஓட்டு வாங்க வந்த அதிகாரிகளுடன், தி.மு.க.,வினர் 10 பேர் சேர்ந்து, அந்த ஊரில் உள்ள முதியவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என, தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து, அதிகாரிகள், முதிய வாக்காளர்களிடம் செல்லாமல், அவர்கள் குடும்பத்தினரிடம் சென்று கைரேகை வைத்து, முறைகேடாக தி.மு.க., சின்னத்திற்கு ஓட்டு பெற்று சென்றுள்ளனர்.

இதில், ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம், 86, என்பவருக்கு தெரியாமல், அவரது மனைவி மாணிக்கம் என்பவரிடம் கைரேகை வைத்துக்கொண்டு ஓட்டை வாங்கி சென்றுள்ளனர்.

ஆனால், தர்மலிங்கம் கையொப்பம் நன்றாக போட தெரிந்தவர்.

அதேபோல், அதே பகுதியை சேர்ந்த இரு முதியவர்களின் ஓட்டுக்களையும் வாங்கி சென்றுள்ளனர்.

இதுகுறித்து, கலெக்டர் அலுவலகத்தில், அ.தி.மு.க., மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலர் கோவிந்தசாமி தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

இந்த முறைகேடில் ஈடுபட்ட உதவி மண்டல அலுவலர்கள் நாகலிங்கம் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தேர்தல் அதிகாரி சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

அணைக்கட்டு தொகுதியில், இன்று முதல், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டு பதிவு செய்யும் போது, அவர்களுடன் ஒரு துணை ராணுவ வீரரும் அனுப்பப்படுவார் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.

Advertisement