உதயநிதி சொத்து விவரம்: வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

19


சென்னை; துணை முதல்வர் உதயநிதி வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கில், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த குமாரவேல் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதியின் வேட்பு மனுவில் உள்ள சொத்து விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன. 2021ம் ஆண்டில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

10 கோடி ரூபாய்



இந்த தேர்தலில், அது தொடர்பான எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. அவரது மனைவி, 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தில், ரூ.2.63 கோடி முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பரிவர்த்தனை குறித்து முறையான விளக்கங்கள் எதுவும் வேட்பு மனுவில் இல்லை. 2021ம் ஆண்டு 11.6 கோடி 'ஸ்னோ ஹவுசிங்' நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தற்போதைய வேட்பு மனுவில், 10 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்ட விரோதமானது



மீதமுள்ள 1.6 கோடி பணம் திருப்பி செலுத்தப்பட்டதா என்ற விவரங்கள் இல்லை. 2020ம் ஆண்டுக்கு முன், 2.02 கோடி வருமானம் இருந்ததாக உதயநிதி கூறியிருந்தார். தற்போது, 10.98 கோடி வருமானம் உள்ளதாக கூறியுள்ளார். இதில் வருமானம் மற்றும் சொத்து அதிகரித்தது குறித்து, உரிய விளக்கங்கள் இல்லை. சொத்து குறித்து தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களை வேட்பாளர்கள் தெரிவிப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது.

விசாரணை



எனவே, இந்த முரண்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறை, பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என குமாரவேல் தனது மனுவில் கூறிருந்தார். இந்த மனு, ஐகோர்ட் தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில், வருமான வரி துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement