கோவையில் 4 மதுக்கடைகளுக்கு... வச்சாச்சு சீல்! இன்னும் 65 கடைகள் 'தள்ளாட்டம்'

1

கோவை :தமிழக அரசின் உத்தரவையடுத்து மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 69 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. முதல் கட்டமாக 4 கடைகள் மூடப்பட்டுள்ளன.



தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மாநிலம் முழுவதும் 4,765 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.

சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை 'குடி'மகன்கள்' குடித்தே அழிப்பதால் பல வீடுகளில் தினமும் தகராறு ஏற்படுகிறது. பல குடும்பங்கள் சீரழிகின்றன. போதையில் குற்றச்சம்பவங்களும் நடக்கின்றன.

ஆனால் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதில்லை. மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதே, குடும்பத்தலைவியர் பலரின் நெடுநாளைய கோரிக்கை. பெண்களின் இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளது, புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க.அரசு. முதல்கட்டமாக வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள கடைகளை அகற்ற முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

மாநிலம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 மதுக்கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 மதுக்கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 மதுக்கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் 284 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ள 69 கடைகள் கண்டறியப்பட்டு, 15 நாட்களுக்குள் அவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டு எதிரே உள்ள கடை உட்பட 4 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement