குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி; விஜய் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

48

சென்னை: துாய்மையான அரசியல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, மோசமான அரசியல் செய்கின்றனர். பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி செய்து, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்கின்றனர் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


அவரது அறிக்கை: தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திமுக தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திமுக எம்எல்ஏக்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.

அதேபோன்று சட்டசபையில் இருக்கும் எங்கள் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பிரேமலதா, ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லார் நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில் தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கிறது.

அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க கூட்டணி கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்; ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.

உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி எம்எல்ஏக்களைத் தூக்குற சக்தியா? எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஓட்டளித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு. முதல்வரின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க.

அடுத்து, பிளவுபட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திமுக தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement